Header Ads

Header Ads

ஐ.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் லண்டன் திரும்ப விருப்பம்

சிரியாவில் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார்.
லண்டனில் இருந்து கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஷமீமா பேகம், கதிஜா சுல்தானா, அமைரா அபாஸ் ஆகிய மாணவிகள் வீட்டைவிட்டு வெளியேறினர். சிரியாவில் உள்ள ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் இணைய விரும்பிய அவர்கள், முதலில் துருக்கி சென்று அங்கிருந்து சிரியா சென்றுள்ளனர்.
அந்நாட்டில் ஆன்லைன் மூலம் பயங்கரவாத அமைப்புகள் ஏற்படுத்திய வாய்ப்புகளை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர். சிரியாவின் ரக்காவிற்கு வந்த ஷமீமா, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நெதர்லாந்து நபரை மணந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்து, ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இறந்தன.
அதன்பின்னர் சிரியாவில் அமெரிக்க கூட்டுப் படையினர் நடத்திய வான் தாக்குதலில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சிலர் சரண் அடைந்தனர். அப்பகுதியில் ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டவர்கள் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இதில் ஷமீமா பேகமும் ஒருவர். தற்போது இவர் 9 மாத கர்ப்பமாக இருக்கிறார்.
இது குறித்து ஷமீமா பேகம் கூறுகையில், ‘ஏற்கனவே நான் இரண்டு குழந்தைகளை இழந்த நிலையில், தற்போது வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலனுக்காக லண்டன் திரும்ப விரும்புகிறேன். இந்த முகாமில் இருப்பதால் குழந்தை குறைபாடுகளுடன் இருக்கிறதோ எனும் அச்சத்துடன் இருக்கிறேன்.
இன்னும் சில தினங்களில் குழந்தை பிறக்கும் தருவாயில் உள்ளது. மீண்டும் நாடு திரும்ப எது வேண்டுமானாலும் செய்யவுள்ளேன். எனது குழந்தையுடன் சேர்ந்து அமைதியான வாழ்வை தொடர ஆசைப்படுகிறேன்’ என்றார்.
கடந்த வாரம் ரக்காவில் நடைபெற்ற தாக்குதலில், தன்னுடன் வந்த சுல்தானா இறந்ததாகவும், தனது கணவர் சிரியா போலீசில் சரண் அடைந்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் பென் வல்லஸ் கூறும்போது, ‘இதுபோன்ற சூழ்நிலையில், அரசாங்கம் அப்பெண்ணை மீண்டும் நாடு திரும்ப கட்டாயம் உதவ வேண்டும். எனினும், அந்த பெண் பயங்கரவாதிகளுக்கு உதவியதால் சிறை செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது’ என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.