சட்டசபைக்கு சென்றால் சட்டையை கிழித்துக்கொண்டு வரமாட்டேன்
தமிழக சட்டசபைக்கு தான் சென்றால் சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே வரமாட்டேன் என்று மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கல்லூரி மாணவ மாணவிகளின் அமைப்பான ரோட்ட ராக்ட் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
நான் வித்தியாசமான, வினோதமான அரசியல் வாதி. நான் ஒரு திறந்த புத்தகம். அரசியலில் எதுவும் சரியில்லை அதை சரி செய்ய வேண்டும் என்று நினைத்தாலே நீங்கள் அரசியலுக்குள் வந்துவிட்டீர்கள் என்று அர்த்தம். அரசியல் நம் வாழ்க்கையின் ஒரு அங்கம். தாமதமாக அரசியலுக்கு வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
அரசியல் மாணவர்களுக்கு தேவையில்லை என்று சொல்வதை ஏற்க மாட்டேன். மாணவர்களைப்போல நாட்டில் அனைவருக்கும் அரசியல் தேவை. சாதி பெருமை பேசக் கூடாது என எனக்கு வீட்டில் கற்றுக் கொடுத்தார்கள். அதற்காக பெருமைப்படுகிறேன். சாதி பெருமை பற்றி பேசாமல் இருந்தாலே கலவரம் குறையும்.
உங்கள் முகத்தினை பார்க்கும் போது நல்லவர்கள் தலைவராக தெரியாவிட்டால் கெட்டவர்கள் தலைவராக தெரிவார்கள்.
முதலமைச்சர் என்பவர் மக்களுக்காக உழைக்கும் அதிகாரி. ஆட்சியில் இருப்பவர்கள் 5 ஆண்டுகள் சரியாக ஆட்சி செய்கிறார்களா? என்பதை கவனியுங்கள். யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். ஆனால் நிச்சயம் வாக்களியுங்கள்.
சமூக வலைதளங்களில் நீங்கள் குரல் கொடுப்பதே அரசியல்தான். நேரத்தை வீணடிப்பதற்கு பதில் வாக்குச்சாவடி செல்லுங்கள். வாக்களியுங்கள். அரசியலில் என்னையும், என்னுடைய நேரத்தையும் முதலீடு செய்துள்ளேன்.
அரசியலுக்கு வந்ததால் 4 படங்கள் நடிப்பதற்கு பதில் 1 படத்தில் மட்டும் நடிக்கிறேன். சட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ளமாட்டேன். அப்படி சட்டை கிழிந்தாலும் நல்ல சட்டை போட்டுக் கொண்டுதான் வெளியில் வருவேன்.
வாழ்க்கையில் சிறு சிறு விசயங்களில் விட்டுக் கொடுத்து போக வேண்டும். அரசியல் மாண்பின் கடைசி கோட்டைச்சுவர் மாணவர்கள். தமிழகத்தில் அரசியல் என்னும் குழந்தை தடுமாறுகிறது. அதை கவனிக்க வேண்டும். மாணவர்களால் இதை சரிசெய்ய முடியும்.
தமிழன் என்பது தகுதி அல்ல. ஒரு விலாசம். தமிழன் என்ற தகுதியை வைத்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. தமிழகம் இல்லாமல் டெல்லி ஆட்சி அமையாது. டெல்லி இல்லாமல் தமிழகம் ஆட்சி அமைக்க நினைக்க கூடாது.
No comments: