இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 122ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் புதிதாக மூன்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவிக்கின்றது.
இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ள குறித்த நபருக்கு நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் ஆகிய நோய்கள் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே குறித்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்ததுடன், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்திருந்தார்.
உயிரிழந்த நபரின் சடலத்தை அரசாங்கம் உறவினர்களிடம் கையளிக்காது, அரசாங்கத்தின் செலவில் தகனம் செய்திருந்தது.
இறுதிக் கிரியைகளுக்கு இரண்டு உறவினர்கள் மாத்திரம் அழைக்கப்பட்டிருந்ததுடன், பலத்த சுகாதார பாதுகாப்புக்கு மத்தியில் சடலம் தகனம் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 104 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், 14 பேர் இதுவரை சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவிக்கின்றது.
No comments: